
‘தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் கே.சி.ஆரின் ஊழல் குறித்து விசாரித்து சிறைக்கு அனுப்புவோம்’ என நாரயணபேட்டில் நடந்த தேர்தல் பொது கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசினார். தெலங்கானா மாநிலம், நாரயணபேட்டில் நேற்று நடந்த தேர்தல் பொது கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்று வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தெலங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தலில் சந்திரசேகர ராவ் அரசை தோற்கடிக்க வேண்டும். மாநிலத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரையே முதல்வராக்குவோம். தெலங்கானா உருவான பிறகு கே.சி.ஆர்(கே.சந்திரசேகரராவ்) குடும்பம் மட்டுமே பலனடைந்துள்ளது. தனி மாநிலத்தால் கிடைக்க வேண்டிய பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை.
கே.சி.ஆருக்கு காலேஸ்வரம் அணை திட்டம் ஏ.டி.எம் போல மாறிவிட்டது. கேசிஆர் ஊழலால் மேடிகட்டா தடுப்பணை இடிந்து விழுந்துள்ளது. மியாபூர் நிலங்களில் ரூ.4 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. தலித் பந்து திட்டத்தில் எம்எல்ஏக்களுக்கு 30 சதவீத கமிஷன் வழங்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்ததும், கே.சி.ஆரின் ஊழல்களை விசாரித்து சிறைக்கு அனுப்புவோம். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கிய நிதி ஏழைகளுக்கு செல்லவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.