
மேல்மருவத்தூர் ரெயில்நிலையத்தில் ரெயிலில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் பலி
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 52). இவர் திண்டிவனம் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு பயணிகள் ரயிலில் பயணம் செய்து வந்தார். அவ்வாறு செல்லும் போது மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் வீட்டில் இருந்து எடுக்கப்படும் உணவை சாப்பிட்டு பாத்திரம் கழுவுவது வழக்கம். நேற்று போல் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் உள்ள குழாயில் பாத்திரம் மற்றும் கைகளை கழுவிவிட்டு மீண்டும் ரயிலில் ஏற வந்தார். பின்னர் ரயில் புறப்பட்டது. அவசர அவசரமாக ஓடும் போது கால் தவறி நடைமேடைக்கும் தண்டவாளத்துக்கும் இடையில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செங்கல்பட்டு ரயில்வே போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.