
நெல்லை-தென்காசி வழித்தடத்தில் ரெயில்களை 110 கி.மீ. வேகத்தில் இயக்க அனுமதி
நெல்லையில் இருந்து சேரன்மாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம் வழியாக தென்காசிக்கு 72 கி.மீ., தூரத்துக்கு ரயில் பாதை உள்ளது. இந்த வழித்தடத்தில் நெல்லை-செங்கோட்டை பாசஞ்சர், நெல்லை-பாலக்காடு, நெல்லை-மேட்டுப்பாளையம், நெல்லை-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில்கள் வேகமாக ஓடுவதற்கு வசதியாக இந்த பாதை மின்மயமாக்கப்பட்டு, பாதை பலப்படுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த வாரம் இந்த வழித்தடத்தில் அதிவேக ரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.
மேலும் மின்சார ரயில் ஓட்டுனர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நெல்லை-தென்காசி இடையே 110 கி.மீ. அதிவேகமாக ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. வளைவான பகுதிகளில் மட்டும் வேகத்தை குறைக்குமாறு கூறிய நிர்வாகம், அந்த இடங்களையும் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழித்தடத்தில் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, ஒவ்வொரு ரயில் நிலையத்திலிருந்தும் வந்து செல்லும் மற்றும் புறப்படும் ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.