ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு… 117 ரன்களில் சுருண்ட இந்தியா…!!!

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. மும்பையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, சும்பன் கில் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

இதில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே கில் டக் அவுட்டாகி ஏமாற்றினார். அதன்பின் ரோஹித்துடன் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். கேப்டன் ரோஹித் 13 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி ஆட்டம் போல் முதல் பந்திலேயே சூர்யகுமார் யாதவ் அவுட் ஆனார். மிகவும் நிதானமாக விளையாடிய கோஹ்லி 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய ராகுல் 9 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 1 ரன்களிலும், ஜடேஜா 16 ரன்களிலும், குல்தீப் 4 ரன்களிலும், ஷமி 0 ரன்களிலும் வெளியேறினர். இறுதியில் இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதன்பிறகு 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா விளையாடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *