
ஈரோடு அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
ஈரோடு ; ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் ஈரோடு அருகே லக்காபுரம் முத்துகவுண்டம்பாளையம் நால்ரோடு பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அந்த காரில் ரேஷன் அரிசி மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காரில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பெருந்துறையைச் சேர்ந்த பெரியசாமி (வயது 40), கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூரை சேர்ந்த காதர் மொண்டலின் மகன் குலாம் முஸ்தபா மொண்டல் (22) ஆகியோரும், அவர்கள் பெருந்துறையில் உள்ள வடமாநிலத்தவர்களுக்கு ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 800 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தி கார்களை பறிமுதல் செய்தனர்.