
படகு கவிழ்ந்ததில் காணாமல் போன கடற்றொழிலாளி
இலங்கையில் மட்டக்களப்பு முகத்துவாரம் கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் மீன்பிடிச்சென்ற ஒருவர் காணாமல்போயுள்ளார். இந்த நிலையில் இரண்டு பேர் உயிர்தப்பியுள்ளனர். அசாதாரணமான காலநிலை காரணமாக கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகின்ற போதும் நேற்று இரவு மட்டக்களப்பு முகத்துவாரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிச்சென்றவர்களின் படகே இவ்வாறு கவிழ்ந்துள்ளது. நேற்றைய தினம் மீன்பிடி திணைக்களத்தினால் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையிலும் இந்த கடற்றொழிலாளர்கள் குடும்ப வறுமை காரணமாக மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இந்த நிலையில் கடல் கொந்தழிப்பு காரணமாக படகு கவிழ்ந்துள்ள நிலையில் இருவர் நீந்திக் கரைசேர்ந்துள்ளதுடன் ஒருவர் காணாமல்போயுள்ளதாக கடற்றொழிலாளர்கள் கூறியுள்ளனர் . இந்த சம்பவத்தில் காணாமல்போனவர் திராய்மடு பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான இருதயநாதன் அந்தோனி வயது 41 என்பவரே ஆவார் . காணமல்போனவருக்கு நேற்றைய தினம் பிறந்த நாள் எனவும் காணமல்போனவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இது சம்பந்தமாக மட்டக்களப்பு, கொக்குவில் காவல் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரரணைகளை முன்னெடுத்துள்ளனர்.