கோவையில் மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்…
கோவையில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு கரூர் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
சிஐடியு மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாநில தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மின் வாரிய ஊழியர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- கேங்மேன் தொழிலாளர்களுக்கு இடுப்பு கயிறு, கையுறை, டார்ச் லைட், மண் கம்பி போன்ற பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். 5,600 கேங்மேன் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
ஊழியர்களுக்கு இடமாற்ற உத்தரவு வழங்க வேண்டும். பகுதி நேர பணியாளர்களுக்கு பணி வழங்காத நிர்வாகத்தை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இவ்வாறு அவர்கள் கூறினர்.