
நாளை முதல் இந்தியாவில் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து…!!!
இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி 1வது மற்றும் 2வது டோஸ்களாக கொடுக்கப்பட்டு, பூஸ்டர் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்று பரவாமல் தடுக்கிறது. இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை மூக்கு வழியாக செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. அதன்படி, இந்நிறுவனத்தின் தடுப்பூசியான இன்கோவாக், இந்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து அவசரகால பயன்பாட்டு அனுமதியைப் பெற்றுள்ளது. இதன்மூலம், மூக்கு வழியாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து விநியோக முறையை மேற்கொண்ட முதல் நிறுவனம் என்ற பெருமையை பாரத் பயோடெக் பெற்றுள்ளது.
இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் இன்கோவெக் நாசி கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் விலை நிர்ணயம் செய்ய மத்திய அரசு டிசம்பர் மாத இறுதியில் ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த கட்டமாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து நாளை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா திறந்து வைக்கிறார். பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து இந்த நாசி ஸ்பிரே சந்தையில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி, நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட எவருக்கும் இது பூஸ்டர் டோஸாகப் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், இன்கோவாக் எனப்படும் இந்த கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்து இன்னும் அரசாங்கத்தின் இணையதளத்தில் கிடைக்கவில்லை. தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.800க்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.325க்கு விற்கப்படும்.