
சேலத்தில் இருந்து 500 பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கம்..!!
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 15ம் தேதி பொங்கலும், 16ம் தேதி மாட்டு பொங்கலும், 17ம் தேதி விவசாயிகள் தினமும் கொண்டாடப்படுகிறது. வெளியூர்களில் வசிக்கும் மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். சேலம் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:- சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டலம் சார்பில், பல்வேறு வழித்தடங்களில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேசமயம், முக்கிய பண்டிகை நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, ஓசூர், வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சேலம் மண்டலம் சார்பில், சேலம் மற்றும் நாமக்கல்லில் இருந்து, 300 சிறப்பு பஸ்களும், தர்மபுரி மண்டலம் சார்பில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூரில் இருந்து, 200 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.