
கவர்னரை அமர வைத்து கொண்டு முதலமைச்சர் பேசியது அநாகரீகமானது- எடப்பாடி பழனிசாமி
கவர்னர் உரை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டியின் போது அவர் கூறியதாவது:-
கவர்னர் உரை என்பது ஆண்டு தொடக்கத்தில் அரசு செயல்படுத்த உள்ள திட்டங்கள், கொள்கைகள் பற்றியதாகும். சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் புதிய பெரிய திட்டங்கள் எதுவும் கவர்னர் உரையில் இடம் பெறவில்லை. அரசும், முதலமைச்சரும் தங்கள் முதுகை தாங்களே தட்டிக்கொண்டு கவர்னர் மூலமாக சபாஷ் போட்டுக் கொண்டுள்ளனர்.
நாங்கள் கவர்னர் உரையைத் தான் கேட்க வந்தோம். முதலமைச்சர் உரையை கேட்க வரவில்லை. அச்சிடப்பட்ட கவர்னர் உரை அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அது முதலமைச்சருக்கும் பொருந்தும். கவர்னரை அமர வைத்து கொண்டு முதலமைச்சர் அவ்வாறு பேசியது மரபுக்கு எதிரானது. அநாகரீகமானது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது. போதை பொருள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது என்று கூறினார்.