
அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி
கிருஷ்ணகிரி:
சூளகிரி அருகே உள்ள குட்டலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சீனப்பா. இவரது மகன் ஆஞ்சப்பா (வயது 25). கூலி தொழிலாளி. இவருக்கும் சூளகிரி அருகே தியாகரசனப் பள்ளி கிராமத்தை சேர்ந்த கோபால் மகள் வெண்ணிலாவுக்கும் 1 மாதம் முன்பு திருமணமானது. நேற்று இரவு குட்டலப்பள்ளியில் இருந்து ஆஞ்சப்பாவும், அவரது மனைவியும் இருசக்கர வாகனத்தில் பேரிகை- சூளகிரி சாலையில் சென்று கொண்டு இருந்தனர். ஏ.செட்டி பள்ளி பகுதி வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ஆஞ்சப்பா பலியானார். மனைவி கால் முறிந்து படுகாயம் அடைந்தார். இதை அறிந்த பேரிகை போலீசார் படுகாயம் அடைந்த வெண்ணிலாவை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு ஆஞ்சப்பா உடலை ஒசூர் அரசு மருத்துமனைக் கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்பு விபத்தை ஏற்படுத்திய வாகனம் எது என தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.