
தமிழைப் பற்றி கவர்னருக்கு என்ன தெரியும்?- பிரேமலதா
சிவகாசி, ராஜபாளையம் பகுதிகளில் நடைபெறும் தே.மு.தி.க. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கட்சியின் பொருளாளர் பிரேமலதா இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்றுதான். தமிழைப் பற்றி கவர்னருக்கு என்ன தெரியும்? ஏதோ 5 ஆண்டுகள் தமிழகத்தில் கவர்னராக இருப்பதால் அவருக்கு தமிழைப் பற்றி என்ன தெரியும்? கவர்னரின் கருத்துக்கு தே.மு.தி.க. தனது எதிர்ப்பை தெரிவிக்கிறது. மக்கள் ஐ.டி. எடுப்பதை மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் எடுக்க வேண்டும். ஆதார் மூலம் அனைத்து சலுகைகளும் மக்களிடம் சென்றடைகிறது. இந்த நிலையில் மக்கள் ஐ.டி. தேவையில்லை. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் அதிக நாட்கள் இருக்கிறது. அப்போது கூட்டணி பற்றி முடிவு செய்வோம். தற்போது தே.மு.தி.க. உட்கட்சி தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது நிறைவு பெற்றதும் கட்சியின் செயற்குழு-பொதுக்குழு கூட்டம் நடத்தி பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார் என்று கூறினார்.