அமைச்சர் அன்பில் மகேஷ் விடுத்துள்ள அறிக்கை தொடர்பான தகவல்!

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் மாவட்டங்கள்தோறும் பொது நூலகங்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு பொது நூலகச் சட்டத்தின்படி மாநில நூலகக் குழு அமைக்கப்பட வேண்டும். இக்குழு 2004-ம் ஆண்டு அமைக்கப்பட்டதற்குப் பின்னர் இதுவரை மாற்றி அமைக்கப்படவில்லை. மேலும் சென்னை மாவட்ட நூலகங்களை நிர்வகிக்க, சென்னை மாநகர நூலக ஆணைக்குழு அமைப்பு இறுதியாக 2010-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் 16.5.2011 அன்று பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டதைத் தொடர்ந்து, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த குழு மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆனால் 2011-ம் ஆண்டிற்குப் பின்னர் சென்னை மாநகரத்திற்கு நூலக ஆணைக்குழு அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. இந்நிலையில் மாநில நூலகக்குழு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான எனது தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர், துறை செயலாளர்கள் மற்றும் 3 சட்டமன்ற உறுப்பினர்களுடன், நூலகத்துறையில் அனுபவம் உள்ள ஜி.கோபண்ணா, தமிழ்நாடு நூலகச் சங்கத்தைச் சார்ந்த ஜி.ரத்தினசபாபதி, சென்னை நூலகச் சங்கத்தைச் சார்ந்த கே.நித்யானந்தம், சென்னை மாநகர நூலக ஆணைக்குழு உறுப்பினர் சார்பாக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் ஜி.சுந்தர் உள்பட 15 உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கவிஞர், எழுத்தாளர் மற்றும் பதிப்பாளரான மனுஷ்யபுத்திரன் என்கின்ற எஸ்.அப்துல்ஹமீது மற்றும் கவிஞர், எழுத்தாளர் தமிழ் தாசன் உள்ளிட்ட 11 உறுப்பினர்களைக் கொண்ட சென்னை மாநகர நூலக ஆணைக் குழுவையும் அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *