
நிரவ் மோடி விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வாய்ப்பு
இந்தியாவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகளாக லண்டன் வேண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கு விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
நீரவ் மோடி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய அபாயம் இருப்பதாக அவர் தரப்பில் வாதிடப்பட்டதால் அதுகுறித்து விசாரிக்கப்பட்டது. மருத்துவ சோதனைகளின் அடிப்படையில் அவரது மனநிலை நன்றாக இருப்பதையும், தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை என்பதையும் உறுதி செய்த நீதிமன்றம், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது.
இதனையடுத்து நீரவ் மோடி தன்னை நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாகவும், அதற்கேற்ப தனக்கு 2 வார கால அவகாசம் வழங்கவேண்டும் என்றும், லண்டன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிரவ் மோடி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து அவர் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வாய்ப்பு உள்ளது.