
மொழி, கலாச்சார வேறுபாடுகளை கடந்து இளைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர்- பிரதமர் மோடி பேச்சு
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய மகரிஷி அரவிந்தரின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. காணொலி காட்சி வழியாக இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசுகையில்,
நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டு அரவிந்தருக்கு தேசம் அஞ்சலி செலுத்துகிறது. இத்தகைய முயற்சிகள் நாட்டிற்கு புதிய ஆற்றலையும் வலிமையையும் தரும். சில தலைசிறந்த தலைவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து, தேசத்தின் ஆன்மாவிற்கு புத்துயிரூட்டினர்.
இந்தியா தனது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தால் எந்தளவுக்கு பின்னிப்பிணைந்த நாடு என்பதை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, உலகுக்கு எடுத்துரைத்துள்ளது. அத்தகையை சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. மொழி, கலாச்சாரம் ஆகிய வேறுபாடுகளைக் களைந்து இளைஞர்கள் ஒன்றிணைந்து இருப்பதை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வெளிப்படுத்தியது.
உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நாட்டின் வளர்ச்சி பயணத்தில் அனைவரது கருத்துகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஒட்டுமொத்த உலகின் முன்பு, இந்தியாவை முதலிடத்திற்கு முன்னேற்றி நம்முடைய கலாச்சாரத்தை பெருமிதத்துடன் வெளிப்படுத்துவதற்காக நாம் அனைவரும் பணியாற்ற வேண்டும். வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை மாற்ற நாம் அனைவரும் தயாராவோம் என தெரிவித்தார்.