
ஏர்போர்ட்டில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் மோசடி
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த வாலிபர் பி.எஸ்.சி. படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது இன்ஸ்ட்டாகிராமில் ஒரு பதிவு வந்தது. அதில், நான் பெங்களூர் ஏர்போர்ட்டில் வேலை பார்த்து வருகிறேன். பணம் கொடுத்து தான் அந்த வேலையில் சேர்ந்தேன் . உங்களுக்கும் ஏர்போர்ட்டில் வேலை வேண்டும் என்றால் பணம் அனுப்புங்கள் என ஆசை வார்த்தை கூறினார் . இதனை நம்பிய அந்த வாலிபர் அந்த வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் அனுப்பினார். இதனைத் தொடர்ந்து வேலைக்கு சேர்வதற்கான போலி அனுமதி விண்ணப்பத்தை அந்த மர்ம நபர் அனுப்பி வைத்தார். இதனை பதிவிறக்கம் செய்து வாலிபர் பெங்களூர் ஏர்போர்ட்டுக்கு சென்றார். அது போலியானது என்றும் தன்னை மோசடி செய்து விட்டனர் என்றும் அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து வாலிபர் தஞ்சை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.