இந்தியாவின் தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் 94 ஆண்டுகள் பழமையானது. இதை கட்டும்போது ரூ.83 லட்சம் செலவானது. இந்த கட்டிடத்தை இடிக்காமல் அதனையொட்டி 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புதிய பாராளுமன்றம் முக்கோண வடிவில் கட்டப்பட உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம் அம்பர்நாத் நகரில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்காக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சுலே நேற்று சென்றபோது அளித்த பேட்டியில், மத்திய விஸ்டா திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.800 முதல் ரூ.1000 கோடி செலவிடப்போகிறது. புதிய பாராளுமன்றம் கட்டுங்கள் என்று எம்.பி.க்கள் கேட்கவில்லையே. தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் முழுமையாக குறையாத நிலையில் புதிய பாராளுமன்றம் கட்டுவது தேவையில்லாத ஒன்று. எம்.பி.க்களுக்கான நிதியை ரத்து செய்துவிட்டு புதிய பாராளுமன்றம் கட்டுகிறது மத்திய அரசு. எங்களின் நிதியில் மக்களுக்கு பயன்படும் வகையில் ஆஸ்பத்திரி கட்டப்போகிறோம் என்றால் 5 ஆண்டுகளுக்கும் ரத்து செய்துவிடுங்கள் என்று நான் மகிழ்ச்சியுடன் கொடுத்திருப்பேன் என்று கூறினார்.
