லாகூர்,
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் டி20 வருகிற டிசம்பர் 18ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக தற்போது நியூசிலாந்தில் ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு 3வது நாளில் கொரோனா பரிசோதனை நடந்தது.
இதில் இன்று வரை 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், ஓட்டலில் தங்கியுள்ள பாகிஸ்தான் வீரர்கள் குழுவாக பயிற்சியில் ஈடுபட கொடுக்கப்பட்ட அனுமதியை நியூசிலாந்து அரசு ரத்து செய்தது. மேலும் தொடர்ந்து விதியை மீறி நடந்துகொள்வதால் பொறுமை இழந்த நியூசிலாந்து அரசு, பாகிஸ்தான் வீரர்கள் விதிமுறைகளை மீறி நடந்தால், நியூசிலாந்திலிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்தது.
இதுபற்றி அறிந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் கூறுகையில்,
பாகிஸ்தான் அணி ஒரு தேசிய அணி. சுற்றுப்பயணம் ரத்து செய்யப்படும் என எப்படி நீங்கள் கூற முடியும்? நீங்கள் எங்களுக்கு அவசியமில்லை. போட்டிகளை ஒளிபரப்பும் உரிமைகளுக்காக கிடைக்கும் பணம் உங்களுக்கு போய் சேரும். எங்களுக்கு அல்ல. அதனால், இதுபோன்ற சோதனையான காலத்தில் உங்கள் நாட்டிற்கு நாங்கள் வந்து விளையாடுவதற்கு நீங்கள் எங்களுக்கு கடன்பட்டு இருக்கிறீர்கள்.
நீங்கள் பாகிஸ்தானை பற்றி பேசுகிறீர்கள். அதனால் உணர்ந்து நடந்து கொள்ளுங்கள். இதுபோன்ற அறிக்கைகளை இனி வெளியிடாமல் நிறுத்தி கொள்ளுங்கள். என்ன கூறுகிறீர்கள் என்பதில், அடுத்த முறை கவனமுடன் இருங்கள் என அக்தர் பேசியுள்ளார்.