ரியோ டி ஜெனிரோ,
உலகம் முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13.70 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு 20 முதல் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
பிரேசிலில், ஒரே நாளில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து, அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்து 70 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆயிரத்து 385 ஆக உயர்ந்துள்ளது.